காசி தமிழ் சங்கமம்-3.0: தொழில் வல்லுநர்களும், தொழில்முனைவோரும் ஹனுமன் படித்துறையில் புனித நீராடினார்கள்
சென்னை :
காசி தமிழ் சங்கமத்தின் மூன்றாவது ஆண்டு நிகழ்வில் பங்கேற்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர் குழுவினர் ஹனுமன் படித்துறைக்கு வருகை தந்தனர். அவர்கள் கங்கையில் புனித நீராடி, பிரார்த்தனை செய்து, செழிப்புக்கான ஆசீர்வாதங்களை வேண்டினர். அதே நேரத்தில், அந்த இடத்தில் இருந்த ஆச்சாரியார்கள் ஆற்றின் பல்வேறு படித்துறைகளின் வரலாறு குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக கல்வி அமைச்சகத்தால் காசி தமிழ் சங்கமம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கங்கையில் புனித நீராடிய பின், அவர்கள் படித்துறையை ஒட்டியுள்ள பழங்கால கோயில்களில் பிரார்த்தனை செய்தனர். இந்தக் கோயில்களின் வரலாறு, பிரம்மாண்டக் கட்டமைப்பு மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் பற்றிய விவரங்கள் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஹனுமன் படித்துறையில் உள்ள சுப்பிரமணிய பாரதியின் வீட்டிற்கு சென்ற தமிழக பிரதிநிதிகள், அங்கு அவரது குடும்பத்தினரை சந்தித்தனர். பார்வையாளர்கள் அவரது வாழ்க்கை மற்றும் பணிகளைப் பற்றி அறிய மிகுந்த ஆர்வம் காட்டினர். அவரது வீட்டிற்கு அருகிலுள்ள நூலகத்தையும் ஆய்வு செய்து சேகரிப்பு குறித்த தகவல்களையும் சேகரித்தனர்.
பின்னர், காஞ்சி மடத்திற்குச் சென்று அதன் வரலாற்றை அறிந்து கொண்டனர். குறிப்பாக காசியில் தென்னிந்திய பாணியில் கட்டப்பட்டுள்ள கோயிலை கண்டு இளைஞர்கள் உற்சாகமடைந்தனர். பண்டிட் வெங்கட்ராமன் கணபதி, காசிக்கும் தமிழ்நாட்டிற்கும், இடையே உள்ள ஆழமான தொடர்பை விவரித்தார். இந்த ஒன்றுகூடல் இரண்டு வார நிகழ்வு அல்ல, பல நூற்றாண்டுகளைக் கடந்து செல்லும் உறவு என்று அவர் கூறினார். ஹனுமன் படித்துறை, கேதார் படித்துறை, ஹரிச்சந்திர படித்துறை ஆகியவை தென் மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இருப்பிடமாக உள்ளன என்றும், இது இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான நீடித்த தொடர்பை பிரதிபலிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். ஹனுமன் படித்துறையில் மட்டும் 150-க்கும் அதிகமான வீடுகள் தமிழ்க் குடும்பங்களுக்குச் சொந்தமானவை. அவர்கள் வாழும் வீதிகளில்தான் காசி தமிழ் சங்கமம் தினமும் நடைபெறுகிறது.
தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர் குழுவின் சார்பாக பேசிய ராமன், காசி விஸ்வநாதர் கோயில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டுள்ளது என்றார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் முன்முயற்சியைப் பாராட்டிய அவர், காசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு பயணம் மேற்கொண்டது சிறந்த அனுபவமாக இருந்தது என்றும், வாரணாசிக்கு தாங்கள் மேற்கொண்ட பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் கூறினார்.